Friday, January 7, 2011

திருப்பாவை - 24, திருவெம்பாவை - 14

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 24

அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய்எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றும் உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்


பொருள்:
திரிவிக்கிரமனாக வந்து இப்பூவுலகை ஓரடியால் அளந்த பெருமாளே, உன் திருவடிகளை போற்றி வணங்குகின்றோம். தென் இலங்கைக்குச் சென்று இராவணாதி அசுரர்களை அழித்தவனே, உனது வலிமையையும் திறமையையும் போற்றி வணங்குகின்றோம். வண்டிச்சக்கர உருவில் வந்த சகடாசுரனை உன் காலால் உதைத்து அழித்தவனே, உனது புகழைப் போற்றி வணங்குகின்றோம். கன்று உருவத்தில் வந்த வத்சாசுரனையே, விளாங்கனிமரமாக நின்ற கபித்தாசுரன் மீது எறிந்து இருவரையும் அழித்தவனே, உன் வீரக்கழல்களை போற்றி வணங்குகின்றோம். கோவர்த்தனகிரியை குடைபோல் தாங்கி பெருமழையிலிருந்து ஆயர்பாடியைக் காத்தவனே, மேன்மைமிக்க உனது குணநலன்களை போற்றி வணங்குகின்றோம். பகைவர்களை வெல்லும் உனது திருக்கரங்களில் உள்ள வேலைப் போற்றி வணங்குகின்றோம். என்றென்றும் உனது அடியவராகி உனக்கு சேவை செய்து வணங்கி வழிபட நோன்பிருக்க புறப்பட்டு வந்துள்ளோம். எங்களைக் கண்டு மனம் இரங்கி அருள்புரிவாய் கண்ணா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்


பொருள்:
செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும்பொன்னாலான அணிகலன்கள் ஆட, கருங்கூந்தாலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர்மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டினங்கள் ஆட, இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்கி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப்பொருளாகிய சிவபெருமானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடி, பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் திருமுடியில் சூடியுள்ள கொன்றை மாலையைப் பாடி, அவனது ஆதியான தன்மையைப் பாடி, அவனே அந்தமுமாக விளங்கும் முறையைப் பாடி, ஏனைய உயிர்களிலிருந்து நம்மை வேறுபடுத்திச் சிறப்புற வைத்து மேல்நிலையில் எடுத்தருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த சிவகாமி அம்மை ஆகியோரின் திருவடிகளை புகழ்ந்து பாடிக்கொண்டே நீராடுவோமாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment