Thursday, December 30, 2010

திருப்பாவை - 16, திருவெம்பாவை - 6

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 16

நாயகனாய் நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண
வாயிற்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்


பொருள்:
அனைத்துப் பெண்களும் துயில் நீக்கி, மார்கழி நீராடி, கண்ணனின் அரண்மனையை அடைந்து விட்ட பின்னர் பாடும் பாடல்

நம் தலைவனாகிய நந்தகோபாலன் எழுந்தருளியுள்ள அரண்மனையைக் காப்பவனே! அழகிய மலர்களால் கொடிகள் கட்டப்பட்ட தோரண வாயிலின் காவலனே! மணிகள் பதித்த கதவுகளின் தாழ் திறந்திடுங்கள். ஆயர்பாடி சிறுமியரான எமக்கு, மாயன், கருநீல நிறமுடைய மணிவண்ணன், நேற்றே நோன்புக்கான பறை தருவதாக வாக்களித்துள்ளான். கண்ணனின் துயில் நீக்க தூய்மையாக வந்திருக்கிறோம். எங்கள் நோன்பின் ஆரம்பமாக மாளிகைக்கு வந்திருக்கும் எங்களுக்காக மறுப்பேதும் கூறாமல் தாழ் அகற்றி, திருக்கதவுகளை திறந்து, நாங்கள் கண்ணனை வழிபட அனுமதியளியுங்கள்.

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 6

மானேநீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறனே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
மான் போன்ற கண்களையுடைய பெண்ணே! நேற்று எங்களிடம், நானே நாளை வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிவிட்டு சிறிதும் வெட்கமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறாயே? நீ கூறிய சொற்கள் எந்தத் திசையில் போயிற்று என்று கூறு. இன்னமும் பொழுது விடியவில்லையோ? வானுலகத்தில் வாழும் தேவர்களும், நிலவுலகில் வாழும் மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவன்களும், மேலும் பிற உலகத்தினரும் அறிவதற்கு அருமையான எம்பெருமானின் திருவடிகள் தானாகவே வலிய வந்து நம்மை ஆட்கொள்பவை. அத்தகைய நெடிய கழலணிந்த திருவடிகளை மனமுருக பாடி வந்த எங்களிடம் நீ வாய் திறந்து பேசாதிருக்கிறாய். உனது உடலும் உருகவில்லை. இந்நிலை உனக்கே பொருந்தும். நம் அனைவருக்கும் தலைவனாக விளங்கும் சிவபிரானை எழுந்து வந்து பாடுவாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment