Tuesday, January 11, 2011

திருப்பாவை - 28, திருவெம்பாவை - 18

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்


பொருள்:
கண்ணா! கறவை மாடுகளுக்குப் பின்னே சென்று, அவைகள் மேயும் போது, கானம் பாடி பின்பு உணவு உட்கொள்வோம். நாங்கள் மாடுமேய்க்கும் இடையர்கள். பெரும் அறிவில்லாதவர்கள். அப்படிப்பட்ட ஆயர் குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதினாலேயே நாங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களாவோம். என்றுமே குறையொன்றும் இல்லாத கோவிந்தா! உன்னுடன் உண்டான உறவானது என்றுமே மாறாதது. நாங்கள் ஏதுமறியாத சிறுமிகள். அன்பினால் உரிமைகொண்டு உன்னை பெயரிட்டு அழைத்திருக்கிறோம். அதற்காக எம் மீது கோபம் கொள்ளாதே. எங்களைக் காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரமருள்வாய் மாதவா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது.

எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்தப் பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment