Thursday, January 6, 2011

திருப்பாவை - 23, திருவெம்பாவை - 13

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 23

மாரி மலைமு
ழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்


பொருள்:
மழைக்காலத்தில், மலைக்குகையில் அயர்ந்து உறங்கும் பெருமை வாய்ந்த சிங்கமானது, உறக்கம் கலைந்து, தீப் பொறி பறக்கும் கண்களை அகல விரித்து, பிடரியை சிலிர்த்து, கழுத்தை சிலுப்பி, உடலை உதறி, சோம்பல் நீங்க நெட்டி முறித்து, நீண்ட முழக்கம் செய்து கம்பீரமாக புறப்படுவது போல, காயா மலர் போன்ற கருமை நிறக் கண்ணா! நீயும் சிம்மகதியில் எழுந்து வந்து இவ்விடம் அடைந்து உனக்கேற்ற பெருமைமிகு சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் உனை நாடி வந்த காரியத்தை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாய் மாதவா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 13

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்ப சிலம்புக் கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்க
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
பசுமையான குவளையின் கருமையான மலர்களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவையுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment