Thursday, January 6, 2011

திருப்பாவை - 22, திருவெம்பாவை - 12

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 22

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
பெருமாளே! அழகிய பரந்த இவ்வுலகத்தின் அரசர்கள் தமது ஆணவமும் தற்பெருமையும் அழிக்கப்பட்டு உனது பஞ்சணைக்குக் கீழே வந்து உன்னடியில் காத்திருக்கின்றனர். அது போல நாங்களும் உன்னைச் சரணடைந்து நீ கண் விழிப்பதற்காக வந்து நிற்கின்றோம். சலங்கை போன்று சற்றே வாய் பிளந்திருக்கும் செந்தாமரை மலர்களை ஒத்த, பாதி திறந்தும் திறவாமலும் இருக்கும் உனது கண்களை முழுமையாகத் திறந்து எம்மை பாராய் கண்ணா! வெப்பம் தரும் சூரியனும், குளிர்ந்த சந்திரனும் போன்ற இரு விழிகளால் எங்களை நோக்குவாயாக. அதன் மூலம் எங்கள் பாபங்களும் சாபங்களும் அனைத்தும் அகன்றுவிடும்.


மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோ ரெம்பாவாய்


பொருள்:
நம்மைப் பிணித்த பிறவித்துன்பம் ஒழியும்படி நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லை சிற்றம்பலத்தில் ஞான சபையில் தனது இடக்கரத்திலே அனலை ஏந்தி நாம் எல்லாரும் உய்ய ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற கூத்தபிரான். விண்ணுலகத்தையும் இந்நிலவுலகத்தையும் மற்றும் சகல பிரம்மாண்டத்தையும், நம் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன். அப்பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலின் மேல் வண்டுகள் ஒலிக்கவும், தாமரைகள் பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நம்மை உரிமையுடைய தலைவனது பொற்பாதங்களை துதித்து பெரிய மலைச் சுனை நீரில் நீராடுவோமாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment