Wednesday, January 5, 2011

திருப்பாவை - 21, திருவெம்பாவை - 11

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 21

ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
பாத்திரங்கள் எல்லாம் பொங்கி பெருகி வழியுமாறு பாலைப் பொழிகின்ற வள்ளல் தன்மை பொருந்திய பசுக்களை உடைய நந்தகோபனின் திருமகனே கண்ணா! எழுந்திரு! உன்னை அண்டியவர்களை காப்பவனே! எல்லாருக்கும் தலைவனே! ஒளிச்சுடராய் உலகமெங்கும் நிறைந்தவனே எழுந்திராய்!

பகைவர்கள் எல்லாரும் உன்னிடம் தோற்று, தங்களுடைய வலிமையெல்லாம் இழந்து, வேறு வழி இல்லாமல் உன் வாசல் தேடி வந்து உனது பொற் திருவடிகளில் விழுந்து சரணடைவது போல நாங்களும் உன் வாசலில் வந்து நின்று உன் புகழ் பாடுகின்றோம், நீ மகிழ்ந்து எழுந்து வந்து அருள்வாயாக!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரேன்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்


பொருள்:
அக்கினி போன்ற சிவந்த நிறமுடையவனே! வெண்ணிற திருநீற்றினால் உடல் முழுவதும் மூழ்கப் பெற்றவனே! ஈசனே! உடுக்கை போன்ற சிறிய இடையினையும் மைதீட்டிய அகன்ற பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் மணவாளனே!

உனது பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வண்டுகள் நிறைந்து மொய்க்கின்ற அகன்ற பொய்கையில் முகேர் என்று ஒலி எழும்படியாக புகுந்து, கைகளால் குடைந்து குடைந்து, குளிர்ந்த நீரில் நீராடி வீரக் கழலணிந்த உனது திருவடிகளைப் புகழ்ந்துப் பாடி வருகின்றோம். எங்கள் தலைவனே! நீ ஆட்கொள்ளும் திருவிளையாட்டினால் துன்பத்தினின்று நீங்கி இன்பத்தைப் பெற்ற அடியார்கள் செல்லும் நெறியில் நாங்களும் செல்கின்றோம். இனி எங்களையும் நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டுகிறோம் எம்பெருமானே!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment