Tuesday, January 4, 2011

திருப்பாவை - 20, திருவெம்பாவை - 10

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்


பொருள்:
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், இடர்கள் நெருங்குவதற்கு முன்பே, அவர்களின் அச்சத்தை விலக்கி காத்தருளும் கண்ணா! நேர்மையானவனே! திறமையானவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! பகைவருக்கு துன்பமளிப்பவனே! பரந்தாமா, விழித்தெழுக!

செம்பைப் போன்ற மெல்லிய மார்பகங்களையும், சிவந்த இதழ்களையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை நங்கையே! திருமகளே! நீயும் துயிலெழுவாயாக. எங்கள் நோன்பிற்கு தேவையான விசிறியையும், கண்ணாடியையும் அளித்து உன் கணவனை, மலர்க் கண்ணனை எங்களுடன் நீராட்ட அனுப்பு தாயே!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார்ப் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்


பொருள்:
திருமாலும் நான்முகனும் காண முடியாத அனற்பிழம்பாக நின்ற அண்ணாமலையாரின் வீரக் கழலணிந்த மலர்ப்பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை மலர், சந்திரன், கங்கை ஆகியவற்றை அணிந்த அவரது திருமுடியோ மேலோருக்கும் மேலாக அண்டங்களைக் கடந்து விளங்குகிறது. அவன் ஒரே வகையானவன் அல்லன். ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன். வேதமுதலாக, விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும் சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற உயிர்த்துணைவன். அத்தன்மையுடைய சிவபெருமானின் ஆலயத்திலுள்ள குற்றமில்லாத குலத்தையுடைய பணிப்பெண்களே! அவனது ஊர் யாது? பெயர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவனைப் பாடும் வகை யாது? அன்புடன் எமக்குக் கூறுவீர்களா?

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment