Tuesday, January 4, 2011

திருப்பாவை - 19, திருவெம்பாவை - 9

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 19

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லயால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்


பொருள்:
சுற்றிலும் குத்து விளக்குகள் எரிய, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய கட்டிலின் மீது, மெத்து மெத்தென்று இருக்கும் அழகிய பஞ்சு மெத்தையில் வாசம் மிகுந்த கொத்துகொத்தான மலர்களை சூடிய நப்பின்னை பிராட்டியின் மார்பினில் சாய்ந்து கொண்டு உறங்கும், நறுமண மலர்மாலையை சூடியுள்ள கண்ணா. உன் திருவாய் மலர்ந்து பேசுவாயாக. மையிட்ட கண்களையுடைய நப்பின்னையே! உன் கணவனின் உறக்கம் கரைந்துவிடக்கூடாது என்று உறங்கும் கண்ணனை எழுப்ப உனக்கு மனமில்லையா? ஒரு நொடிப் பொழுதும் அவனது பிரிவை தாங்க இயலாதவளாக இருக்கிறாயே. நீ இப்படிச் செய்வது நியாயமன்று. உன் இயல்புக்கும் தயாளகுணத்திற்கும் தகுந்ததன்று. எனவே, எங்கள் கோரிக்கையை ஏற்று கண்ணனை எழுப்பு அம்மா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலாமேலோ ரெம்பாவாய்


பொருள்:
(பெண்கள் அனைவரும் சேர்ந்து பாடுகின்றனர்)

எம்பெருமானே! முன்னரே தோன்றிய பழமையான பொருட்களுக்கும்  முற்பட்ட பழமையான பொருளே! பின்னர் தோன்றிய புதிய பொருட்களுக்கெல்லாம் புதுமையாகத் தோன்றும் தன்மையனே!

உன்னை இறைவனாக பெற்ற உன் சிறப்பு மிக்க அடியவர்களாகிய நாங்கள் உனது தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம். அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலேயே அடிமைப் பணி செய்வோம்.

எங்கள் பெருமானே! எங்களுக்கு இவ்வகையான வாழ்க்கை நீங்கள் அருள் புரிவீர்களானால் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாவோம்.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

No comments:

Post a Comment