Thursday, January 13, 2011

திருப்பாவை - 30, திருவெம்பாவை - 20

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 30

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவ ரெம்பாவாய்


பொருள்:
மனமெனும் கப்பல்கள் சென்று அடையும் திருப்பாற்கடலில், மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பை கயிறாக்கி, கூர்ம அவதாரம் எடுத்து மந்திர மலையின் அடியிலே நின்று முட்டுக் கொடுத்து பாற்கடலை கடைந்த மாதவனை, கேசவனை, ஸ்ரீமந்நாராயணனை, நிலவையொத்த அழகிய முகமுடைய பெண்கள், அடியார்களுடன் கூட்டமாகச் சென்று வணங்கி தாங்கள் இறைவனிடம் பெற்றுக் கொண்ட பறையை அடையும் வழியை விளக்கிக் கூறி, அழகிய ஸ்ரீவில்லிப்புத்தூரின், குளிர்ச்சியான தாமரை மாலைகள் அணிந்த, சூடிக் கொடுத்த சுடர்கொடியாம் பட்டர்பிரான் பெரியாழ்வாரின் செல்வமகளாகிய கோதை பாடிக் கொடுத்த இந்த சங்கத்தமிழ் மாலையின் முப்பது பாசுரங்களைத் தவறாமல் நாளும் பாடி, இறைவனை சேவிப்பவர்கள், நான்கு பெரும் மலைகளைப் போன்ற தோள்களை உடையவனும், செவ்வரியோடிய கண்கள் கொண்டவனும், திவ்யமான திருமுகமுடையவனும், திருமகளுடன் இணைந்து இருப்பவனுமாகிய ஸ்ரீமந் நாராயணனின் திருவருளைப் பெற்று பேரானந்தத்தை அடைவர்.

ஆண்டாள் திருநாமம் வாழி


திருவாடிப் புரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருவல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்!!!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 20


போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோ ரெம்பாவாய்!


பொருள்:
எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர்களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.


திருச்சிற்றம்பலம்


நண்பர்களே,

இன்று மார்கழி மாதத்தின் கடைசி நாள். இன்றுடன் நமது திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி - தினமும் ஒரு பாடல் எனும் தொடர் நிறைவுக்கு வருகிறது. மிகுந்த தயக்கம் தோன்றியபோதும், சிறு வயதிலிருந்தே பாடிய இந்தப் பாடல்களை, அதன் பொருளை, அறிந்துக் கொள்ள தக்கதொரு சந்தர்ப்பமாக எண்ணியே இந்தத் தொடர் பதிவினை துவங்கினேன். அந்த சர்வேச்வரனாகிய இறைவனின் கருணையால், ஏதோ நான் படித்ததையும், கேட்டதையும் வைத்து இந்தத் தொடரினை எழுதி இன்று நிறைவு செய்கிறேன். இதில் பிழையேதும் இருக்குமானால், அனைவரும் அதற்காக என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று சொல்வார்கள். மார்கழி எனும் தெய்வீக மாதத்தில் இறைவனை நாம் வழிபட்டு வந்தோமானால், அதன்பொருட்டு இறைவன் அகமகிழ்ந்து தை பிறந்ததும் நமது துன்பங்கள் நீங்க நல்வழிகாட்டுவான் என்பதை இதற்கான விளக்கமாக பெரியோர் கூறுவர். அவ்வாறே உங்கள் அனைவரின் வாழ்விலும் இந்தத் தை மாதம் நல்வழி பிறக்கும் மாதமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 

கூடிய விரைவில் மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி
வர்தினி.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Wednesday, January 12, 2011

திருப்பாவை - 29, திருவெம்பாவை - 19

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 29

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேயாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்


பொருள்:
கோவிந்தா! மிகுந்த விடியற்காலை வேளையிலே அடியார்களுடன் கூட்டமாகச் சேர்ந்து வந்து உன்னை சேவித்து, உனது பொற்பாதங்களையே போற்றிப் பாடுகிறோம், அதன் காரணத்தைக் கூறுகிறோம், கேள்.

பசுக்களை மேய்த்து உண்ணும் சாதாரண இடையர் குலத்தில் எங்களுடன் சேர்ந்து பிறந்த நீ, நாங்கள் உனக்குச் செய்யும் சாதாரண பணிவிடைகளை ஏற்றுக் கொள்ளாமல் போகக்கூடாது, பெருமாளே! இன்று உன் அருளை பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று. இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இன்னும் எத்தனை எத்தனை பிறவிகளை நாங்கள் எடுத்தாலும் உனக்கு நெருங்கியவராக, உனது உறவினராக நாங்கள் விளங்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் சேவை செய்து வாழ வேண்டும். மற்றபடி வேறெந்த விருப்பமும் இதற்குத் தடையாகத் தோன்றிடாது மற்ற ஆசைகளை எம்மிடமிருந்து நீக்கி அருள்புரிவாய் பரந்தாமா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்


பொருள்:
எங்கள் பெருமானே! “உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்ற சொல் பழமையானது. அதைப் புதுப்பித்து கூற வேண்டிய அச்சம் எங்களுக்குத் தோன்றியுள்ளது. எங்களின் விருப்பத்தை நீதான் நிறைவேற்ற வேண்டும் இறைவா! எங்கள் கொங்கைகள் உன் அன்பர் அல்லாதார்கள் தோளைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கல்லாது வேறு எவருக்கும் எந்த தொண்டும் செய்யாதொழிக. எங்கள் கண்கள் இரவும் பகலும் உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக. எங்கள் தலைவனே! எங்களுக்கு இவ்வண்ணம் அருள் புரிந்தாயானால், சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் எங்களுக்கென்ன குறை?

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Tuesday, January 11, 2011

திருப்பாவை - 28, திருவெம்பாவை - 18

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்


பொருள்:
கண்ணா! கறவை மாடுகளுக்குப் பின்னே சென்று, அவைகள் மேயும் போது, கானம் பாடி பின்பு உணவு உட்கொள்வோம். நாங்கள் மாடுமேய்க்கும் இடையர்கள். பெரும் அறிவில்லாதவர்கள். அப்படிப்பட்ட ஆயர் குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதினாலேயே நாங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களாவோம். என்றுமே குறையொன்றும் இல்லாத கோவிந்தா! உன்னுடன் உண்டான உறவானது என்றுமே மாறாதது. நாங்கள் ஏதுமறியாத சிறுமிகள். அன்பினால் உரிமைகொண்டு உன்னை பெயரிட்டு அழைத்திருக்கிறோம். அதற்காக எம் மீது கோபம் கொள்ளாதே. எங்களைக் காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரமருள்வாய் மாதவா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது.

எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்தப் பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Monday, January 10, 2011

திருப்பாவை - 27, திருவெம்பாவை - 17

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 27

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
உன்னுடன் இணங்காதவரையும் இணங்க வைத்து வணங்க வைக்கும் குணக்குன்றே கோவிந்தா! உன்னைப் பாடி நாங்கள் நோன்பு நோற்றோம். அந்த உழைப்பின் பலனாக இப்போது நாங்கள் இவ்வுலகமே வியக்கும் வண்ணம் சன்மானம் பெறுகிறோம். கைவளையல்கள், வங்கி எனப்படும் தோள் வளைகள், தோடு, செவிப்பூ, கால்களில் பாடகம் எனும் கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து எங்களை அலங்கரித்துக் கொள்வோம். புதிய ஆடையுடுத்துவோம். பிறகு பாலிலேயே சோறு வடித்து, அதில் வாசனையான நெய்யை பெய்து, அந்த நெய் முழங்கையில் வழியுமாறு வளமான உணவு உண்போம். எங்களுடன் நீயும் சேர்ந்து, மேலும் அனைத்து அடியார்களும் சேர்ந்து இந்த கொண்டாட்டத்தில் கலந்து ஒன்றாக உணவு உண்டு, ஒன்று கூடி குளிர்ந்திருப்போம்! இவ்வாறு உன்னுடன் சேர்ந்து பாவை நோன்பை முடிக்க வந்துள்ளோம். அதற்கு நீ அருள்வாயாக!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 17

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாத்தோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளுகின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமைகளாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

திருப்பாவை - 26, திருவெம்பாவை - 16

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 26

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலாயார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்


பொருள்:
திருமாலவா! நீல வண்ண கண்ணா! எமது குலப்பெரியோர்கள் எங்களுக்கு கற்பித்த வகையிலே நாங்கள் மார்கழி நீராட்டை தொடர்கிறோம். எங்களது நோன்புக்குத் தேவையான ஆறு பொருட்களை அளித்தருள வேண்டும் கண்ணா!

பால் நிறமுடைய, இவ்வுலகெல்லாம் அதிரும்படி ஒலியெழுப்பும் வல்லமை பொருந்திய உனது பாஞ்சசன்னிய சங்கைப் போன்ற வெண்சங்குகள் வேண்டும், உன்னைப் புகழ்ந்து பாடிட, பெரிய பறை வாத்தியங்கள் வேண்டும், உன்னைப் போற்றி பல்லாண்டு பாடும் அடியார்கள் வேண்டும், அழகிய மங்கல விளக்குகளும், கொடியும், பந்தலும், ஆலிலையில் அமர்ந்திருக்கும் கண்ணா, எங்களுக்கு கருணை கூர்ந்து வழங்குவாயாக! இவற்றைக் கொண்டு நாங்கள் எங்கள் நோன்பினை செவ்வனே முடிக்க அருள்வாயாக!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 16

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்


பொருள்:
மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து, எம்மை உடையாளாகிய அம்மை உமாதேவியனது திருமேனி போல் நீல நிறத்தோடு விளங்கி, எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல் மின்னி விளங்கி, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல் சிலம்பி, அவளது திருப்புருவம் போல் வானில் வானவில் விட்டு, நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப் பிரியாத எம்பெருமான், அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும் தனது திருவுளம் கொண்டு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையை பொழிவாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Saturday, January 8, 2011

திருப்பாவை - 25, திருவெம்பாவை - 15

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தருக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஓர் இரவுக்குள்ளாகவே, யாரும் அறியா வண்ணம் வசுதேவரால் கோகுலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்த கண்ணா! உன்னை அழித்துவிட வேண்டும் என்ற கம்ஸனின் கேடு நிறைந்த தீய நோக்கத்தை பலனற்றதாகச் செய்து, அவனது உயிர்பிரியும் காலம் வரை, அவனது வயிற்றில் நெருப்பு போல் நின்று அச்சமளித்த பெருமாளே! உன்னையே அர்ச்சனை செய்து ஆராதித்து நோன்புக்கான பறை வேண்டி வந்தோம். எங்களை நீ ஆட்கொண்டாயானால், திருமகளுக்கு ஒப்பான உனது அழகையும், உனது பெருமைகளையும் பாடி, வருத்தங்கள் நீங்கி மகிழ்ந்து வாழ்ந்திடுவோம் மதுசூதனா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய முலையையுடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் எம்பெருமானே, சிவபெருமானே என்று வாய் ஓயாது கூறுகின்றாள், மற்றொரு சமயம் நமது மகாதேவனின் புகழை வாய் ஓயாது பேசுகின்றாள். இறைவனைப் பற்றி பேசுவதிலே மனம் மகிழ்ந்து இவளது விழிகள் கண்ணீரை அருவிப் போல் சுரக்கின்றன, மேலும் நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தன்னை மறந்து கிடக்கின்றாள். சிவபிரானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் சிவபெருமானின் பொருட்டு பித்தானவர்கள் தன்மை இவ்வாறு தான் போலும். இவ்வாறு நம்மை ஆட்கொள்ளும் ஞான உருவமாய் விளங்குபவனின் திருவடிகளை வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் குதித்து மார்கழி நீராடுவோமாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

Friday, January 7, 2011

திருப்பாவை - 24, திருவெம்பாவை - 14

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 24

அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய்எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றும் உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்


பொருள்:
திரிவிக்கிரமனாக வந்து இப்பூவுலகை ஓரடியால் அளந்த பெருமாளே, உன் திருவடிகளை போற்றி வணங்குகின்றோம். தென் இலங்கைக்குச் சென்று இராவணாதி அசுரர்களை அழித்தவனே, உனது வலிமையையும் திறமையையும் போற்றி வணங்குகின்றோம். வண்டிச்சக்கர உருவில் வந்த சகடாசுரனை உன் காலால் உதைத்து அழித்தவனே, உனது புகழைப் போற்றி வணங்குகின்றோம். கன்று உருவத்தில் வந்த வத்சாசுரனையே, விளாங்கனிமரமாக நின்ற கபித்தாசுரன் மீது எறிந்து இருவரையும் அழித்தவனே, உன் வீரக்கழல்களை போற்றி வணங்குகின்றோம். கோவர்த்தனகிரியை குடைபோல் தாங்கி பெருமழையிலிருந்து ஆயர்பாடியைக் காத்தவனே, மேன்மைமிக்க உனது குணநலன்களை போற்றி வணங்குகின்றோம். பகைவர்களை வெல்லும் உனது திருக்கரங்களில் உள்ள வேலைப் போற்றி வணங்குகின்றோம். என்றென்றும் உனது அடியவராகி உனக்கு சேவை செய்து வணங்கி வழிபட நோன்பிருக்க புறப்பட்டு வந்துள்ளோம். எங்களைக் கண்டு மனம் இரங்கி அருள்புரிவாய் கண்ணா!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்


பொருள்:
செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும்பொன்னாலான அணிகலன்கள் ஆட, கருங்கூந்தாலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர்மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டினங்கள் ஆட, இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்கி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப்பொருளாகிய சிவபெருமானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடி, பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் திருமுடியில் சூடியுள்ள கொன்றை மாலையைப் பாடி, அவனது ஆதியான தன்மையைப் பாடி, அவனே அந்தமுமாக விளங்கும் முறையைப் பாடி, ஏனைய உயிர்களிலிருந்து நம்மை வேறுபடுத்திச் சிறப்புற வைத்து மேல்நிலையில் எடுத்தருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த சிவகாமி அம்மை ஆகியோரின் திருவடிகளை புகழ்ந்து பாடிக்கொண்டே நீராடுவோமாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்