Sunday, December 19, 2010

மார்கழி திங்களல்லவா...

மார்கழி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் மிளிரும் அழகிய கோலங்கள். மேலும், பிற மாதங்களை விட சற்று முன்னதாகவே நடை திறக்கப்படும் கோவில்கள், விடியற்காலையிலேயே குளித்து, பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடும் பெண்கள், வயது வித்தியாசமின்றி, கோவிலுக்கு வழிபட செல்லும் மக்கள் என மார்கழி துவங்கியதுமே ஊரெங்கும் ஒரு தெய்வீகக்களை தோன்றிவிடுகிறது. 


இறைவனை கண்டு விழிகளின் பசி தீரும், இனிய பாடல்களை கேட்டு செவிகளின் பசி தீரும், அதோடு சுடச்சுட கிடைக்கும் அருட்பிரசாதம் வயிற்றின் பசியை தீர்க்கும். 


பன்னிரெண்டு மாதங்களில் மார்கழிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு என்று சில நேரங்களில் தோன்றுவதுண்டு. அதனை அறிந்து கொள்ளும் முயற்சியின் விளைவே இந்தப் பதிவு.

மார்கழியின் சிறப்பு:

மார்கழி மாதம் தேவர் மாதம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கடவுளை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில், மாதங்களில் தான் மார்கழி என அருளுகிறார்.

“ப்ருஹத்ஸாம் ததா சாம்னாம் காயத்ரீ ச்சந்தஸாமஹம்
மாஸானாம் மார்கஷீர்ஷோ(அ)ஹம்ருதூனாம் குஸுமாகர:”
(அத்தியாயம் 10 – ஸ்லோகம் 35)


மேலும் இந்த மார்கழி மாதத்தில் தான் அனுமத் ஜெயந்தியும், வைணவ திருத்தலங்களின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசியும், சைவ திருத்தலங்களின் முக்கிய விழாவான திருவாதிரை ஆருத்ரா தரிசனமும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

வைணவ திருக்கோவில்களில் சுப்ரபாதத்திற்கு பதில் திருப்பாவையும், சிவாலயங்களில் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சியும் இம்மாதத்தில் பாடப்படுகிறது. 


மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வேண்டி பாவை நோன்பிருப்பர். அத்தகைய நோன்பின் பலனாக தை மாதத்தில் அவர்களின் நல்வாழ்வுக்கான வழியமையும் என்பதை மனதில் கொண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் பழமொழியும் வழக்கில் வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி தினத்தன்று கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாணம் செய்யப்படுகிறதல்லவா? இதன் காரணமாகவும் இப்பழமொழி வழக்கில் வந்திருக்குமோ?

மார்கழி பீடை மாதமா?

மார்கழி மாதத்தில் பொதுவாக திருமணம் மற்றும் இதர மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இதன் பொருட்டு மார்கழி பீடை மாதம் என்கிற தவறான அபிப்பிராயமும் மக்களிடையே உள்ளது. ஆனால் அது உண்மையன்று. மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது; சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது. 


அதிகாலையிலேயே எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவதால், நாடி நரம்புகள் வலுவடைகின்றன. நீண்ட ஆயுளும் சித்திக்கிறது. மேலும் தியானம், ஆன்மிகம், வழிபாடு என்று மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும் பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே தான் உலக வழக்கங்களுக்காக இல்லாமல், இறைவனை வழிபடவென்றே மார்கழி மாதத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.

குதூகலமான நாட்கள்:

மார்கழி என்றால் வீதிக்கு வீதி நடக்கும் கோலப் போட்டிகள், பனிவிழும் விடியற்காலை, கோவிலில் கிடைக்கும் புளியோதரையும் சுண்டலும் (எதை மறந்தாலும் இதை மறக்கவே முடியாது!!!), குழந்தைகளுக்கு கிடைக்கும் அரையாண்டு பள்ளி விடுமுறை, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்,  பிரமாண்டமான புத்தகக் கண்காட்சி, என நமது விருப்பப் பட்டியல் நீண்டு கொண்டே போவதென்னமோ உண்மை தானே!!


படங்கள் மற்றும் தகவல்கள் உபயம்: இணையம்

6 comments: