Thursday, December 23, 2010

திருப்பாவை - 9, திருப்பள்ளியெழுச்சி - 9

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
     தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
     மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
     ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
     நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்


பொருள்:
மாசற்ற மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடத்தில், நாற்புறமும் தீபங்கள் ஒளிர, அகில் மற்றும் சம்பிராணி போன்ற நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமி! உறங்கும் தங்கள் மகளை எழுப்ப மாட்டீரா? அவள் என்ன ஊமையோ, செவிடோ, செருக்கினால் உண்டான சோம்பல் மிக்கவளோ? அல்லது, ஏதேனும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு உறங்குகிறாளோ? இப்பெண்ணை எழுப்பி பாவை நோன்பிற்கு அழைத்துச் செல்ல “திருமகளின் நாயகனே, மாதவா, வைகுந்தா” என்றெல்லாம் நம் பெருமானின் ஆயிரம் நாமங்களை உரக்கச் சொல்லுவோம்.

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
    விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
    வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
    கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்:
வானுலகில் உள்ள தேவர்களும் அடைய முடியாத மெய்ப்பொருளே! இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்த வள்ளலே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த அரசே!

பரம்பரை அடியவர்களான எங்களுடைய கண்ணினுள்ளே நின்று காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கும் தித்திக்கும் தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் மெய்த்தொண்டர்களின் எண்ணத்துள் என்றும் நிறைந்தவனே! உலகம் அனைத்திற்கும் உயிரானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

1 comment:

  1. மாமன் மகள் இப்படித்தான் இருப்பாளோ? அல்லது இப்படி இருப்பவள் தான் மாமன் மகளோ?

    டாக்டர் எல் கைலாசம்

    ReplyDelete