Tuesday, December 21, 2010

திருப்பாவை - 7, திருப்பள்ளியெழுச்சி - 7

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 7


கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைப்பேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்


பொருள்:
பேதைப் பெண்ணே! கீசு கீசு என்று வலியன் குருவிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் இனிய ஒலி இன்னும் உன் காதுகளில் விழவில்லையா?

நெய்மணம் வீசும் கூந்தலையுடைய இடைச்சியர்கள் தாங்கள் அணிந்துள்ள அச்சுத் தாலியும் (காசு மாலை), ஆமைத் தாலியும் (மஞ்சள் நிறத் தாலியும்) உராய்ந்து எழும்பும் கலகலவென்ற ஒலியும், கைகளை மாற்றி மாற்றி அசைத்துத் தயிர் கடைவதினால் ஏற்படும் ஒலியும் கூட உனக்குக் கேட்கவில்லையா? தலைமையுடைய பெண்ணே! நாராயணனின் திரு அவதாரமும், இந்த ஆலயத்தில் தலைவனுமான கேசவனின் திருப்புகழை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம்; அதைக் கேட்ட பின்பும் நீ படுத்துறங்கலாமா? ஒளி பொருந்திய முகமுடையவளே, உடனே வந்து கதவைத் திறந்து, எம்முடன் பாவை நோன்பு மேற்கொள்ள வருவாயாக!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
    கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
    எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
    மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 


பொருள்:
பரம்பொருளானது கனியின் சுவைபோன்றது எனவும், அமுதத்தை ஒத்தது எனவும், அறிவதற்கு அருமையானது எனவும், அறிதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் எம்பெருமான் இருப்பார்; இதுவே அப்பரமனது திருவடிவம்; திருவுருக் கொண்டு வந்த சிவனே அப்பெருமான் என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும்படியாகவே, இவ்வுலகத்தில் எழுந்தருளுகின்ற, தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த திரு உத்தரகோசமங்கையில் எழுந்தருளி இருப்பவனே! திருப்பெருந்துறைக்கு அரசனே! எம் பெருமானே! எம்மைப் பணிகொள்ளும் விதம் யாது? அதனைக் கேட்டு அதன்படி நடப்போம். பள்ளியினின்று எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

2 comments:

  1. தாலி அணியும் வழக்கம் அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை உள்ள நடை முறை போல.

    இன்று பல பெண்கள் தாலியை மறைத்து அல்லவா அணிந்து கொள்கிறார்கள்.

    அச்சுத் தாலியும் ஆமைத் தாலியும் உரையும் பொழுது பெரிய சப்தம் ஏற்படுமா என்ன? அது தூங்கும் பெண்னுக்கு எப்படி கேட்கும்?

    அதீத கற்பனையோ?

    தங்கள் அன்புச் சகோதரன்
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete
  2. ஒருவேளை காசுமாலையுடன் தாலி உராய்வதால் சப்தம் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்குமோ?? இருப்பினும் அது தயிர் கடையும் சப்தத்தை மீறி ஒருவர் காதில் விழ வாய்ப்பில்லை தான்.

    ReplyDelete