Monday, December 20, 2010

திருப்பாவை - 6, திருப்பள்ளியெழுச்சி - 6

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 6

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்:
பெண்ணே, பறவைகள் கூவத் தொடங்கிவிட்டன; பறவைகளின் அரசன் கருடனின் இறைவனாகிய நம் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோவிலிலிருந்து வெண்சங்கு முழங்கும் இனிய ஓசை உன் காதில் விழவில்லையா? பெண்ணே எழுந்திரு. பூதகி எனும் அரக்கியின் முலையில் நஞ்சு கலந்த பாலைக் குடித்து அவளை மாய்த்தவனும், வண்டிச் சக்கர உருவில் வந்த சகடாசுரன் என்ற அரக்கனை தன் காலால் உதைத்து வதம் செய்ய தன் திருவடிகளை உயர்த்தியவனும், திருப்பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனும், இவ்வுலகிற்கே வித்தாக, ஆதிமூலமாக இருப்பவனும் ஆகிய பரந்தாமனை தம் சிந்தையில் இருத்தி, தவமுனிவர்களும் யோகிகளும் நிதானமாக “ஹரி ஹரி” எனும் நாமத்தை தொடர்ந்து ஓதுவதால் உண்டான பேரோசை நம் உள்ளத்தில் புகுந்து உவகையளிக்கிறது. அத்தகைய மாயக் கண்ணனை வணங்கி வழிபட வாராய் பெண்ணே!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 6

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
    பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
    வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்:
உமையம்மையின் மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

3 comments:

  1. ஒரு பாடலில் எத்தனை தெய்வீக சம்பவங்கள்.
    நன்றி வர்த்தினி

    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete