Friday, December 17, 2010

திருப்பாவை - 3, திருப்பள்ளியெழுச்சி - 3

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந் நெல்லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்:
வாமனனாக வந்து நெடியோன் திரிவிக்கிரமனாக ஓங்கி வளர்ந்து இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்த உத்தமனாகிய திருமாலின் திருநாமங்களைப்  பாடி நாம் நம் பாவை நோன்பை நோற்பதன் பலன்கள் என்னவென்று தெரியுமா தோழி?

ஊர் செழிக்க, தீமையில்லாமல் மாதம் மூன்று மழை தவறாமல் பெய்யும், அதனால் வயல்களில் செந்நெல் பயிர்கள் நெடு நெடுவென வளரும், அந்த பயிர்களின் ஊடே கயல் மீன்கள் துள்ளித் திரியும், நிரம்பியிருக்கும் நீர்நிலைகளில் கருங்குவளை மலர்களில் புள்ளிகளையுடைய றுகால் வண்டினங்கள் தேனைக் குடித்து மெய் மறந்து உறங்கும். மாட்டுத்தொழுவத்தில் புகுந்து அழகிய பசுக்களின் மடியைப் பற்றி இழுத்தால் பாலை தேக்கி வைத்துக் கொள்ளாமல் வள்ளல்களைப் போல பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும். எப்போதும் அழியாத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும் என அறிந்து கொள் பெண்ணே!

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 3

கூவின பூங்குயில் கூவின கோழி
    குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
    தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 


பொருள்:
தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன், சிறந்த வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளியெழுந்தருள்வாயாக!

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

3 comments:

  1. நாடு செழிக்க, செல்வம் நிறைந்தோட, தெய்வ சிந்தனையும் நோன்பும் அவசியம். மிக அழகாக விளக்கம் சொல்லி உள்ளீர்கள்
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete
  2. @Raji Mam & Dr. Kailasam sir: Thank you so much :-)))

    ReplyDelete