Wednesday, December 29, 2010

திருப்பாவை - 15, திருவெம்பாவை - 5

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 15

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
     சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
     வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
     எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
     வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்


பொருள்:
எழுப்புபவள்: அடியே, கிளி போல் மொழிபேசும் பெண்ணே! இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே

உள்ளே இருப்பவள்: சில்லென்று கூச்சலிட்டு என்னை அழைக்காதீர்கள். இதோ வருகிறேன்

எழுப்புபவள்: ஆஹா உன் சாமர்த்திய பேச்சுத்திறனை நாங்கள் முன்பே அறிவோம்

உள்ளே இருப்பவள்: நீங்கள் தான் பேச்சுத்திறனுடையவர்கள். உங்கள் தேவைக்கேற்ப என்னைச் சொல்கிறீர்கள்

எழுப்புபவள்: என்ன செய்கிறாய்? சீக்கிரம் எழுந்து வா

உள்ளே இருப்பவள்: நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டனரா?

எழுப்புபவள்: அனைவரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். கம்ஸன் ஏவிய வலிமை பொருந்திய யானையை கொன்றவனும், பகைவர்களின் தவறான செய்கைகளையும் அகந்தையை அழிப்பவனுமாகிய மாயக்கண்ணனின் பெருமைகளை புகழ்ந்து பாட விரைவில் எங்களுடன் வாராய்!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 5

மாலாறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
     ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்


பொருள்:
திருமால் அறிய முடியாத, நான்முகன் காண முடியாத அருட்பெரும் அண்ணாமலையை நாம் அறிந்திட முடியும் என்று பிறர் நம்பும்படி பொய்யை, பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகி, வாயிற்கதவை திறப்பாயாக! இந்த பூவுலகினரும், வானுலகினரும் மற்றும் பிற உலகினரும் அறிவதற்கு அருமையானவனாகிய நம் இறைவனின் அழகையும் நம்மை ஆட்கொண்டருளி குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடி சிவனே சிவனே என்று உள்ளம் உருக உரக்கப் பாடுகின்றோம். அதையும் நீ அறியாது உறக்கம் நீங்காது இருக்கிறாய், மணம் பொருந்திய கூந்தல் உடையவளே, இதுதான் உனது தன்மை போலும்.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

2 comments:

  1. The meaning of "மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை மாயனை" is
    பகைவர்களின் தவறான செய்கைகளையும் அகந்தையை அழிப்பவனுமாகிய மாயக்கண்ணனின் correct?
    Whether we may take the persons who has different views could be changed by mayakkannan
    Kindly confirm

    Yours
    Dr L Kailasam

    ReplyDelete
  2. Yes sir. It could be considered in that meaning also. The main point is that Lord Krishna doesn't destroy the enemies or people with different opinions... He destroys only their wrongful deeds and wrongful character. Only when they are reluctant to change, that he destroys them to safeguard the world.

    ReplyDelete