Monday, December 27, 2010

திருப்பாவை - 13, திருவெம்பாவை - 3

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் முறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்
     கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்


பொருள்:
கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து கொன்றவனும், இலங்கை வேந்தன் இராவணின் பத்துத் தலைகளையும் கிள்ளியெறிந்து மாய்த்தவனுமாகிய எம் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டே, மற்ற பெண்கள் அனைவரும் பாவை நோன்பிருக்கும் இடம் நோக்கி சென்று விட்டனர். வண்டு மேயும் மலர்ப் போன்ற கண்களை உடையவளே! மனமும் உடலும் குளிர பொய்கையில் உள்ள குளிர்ந்த நீரில் அமிழ்ந்து நீராடாமல், இவ்வாறு உறங்கலாமா? இந்த நன்னாளில் உறங்குவது போன்று கள்ளமான பாவனை செய்வதை விட்டு, எங்களுடன் கலந்து வா கண்ணே!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
     அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
     பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
     எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
     இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்


பொருள்:
எழுப்புபவள்: முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து என் அப்பனே! ஆனந்தனே! அமுதம் போன்றவனே என்று இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்ந்து பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய்.

உள்ளே இருப்பவள்: நீங்கள் இறைவனிடத்தில் பேரன்புடையவர்கள். இறைவனது பழைய அடியார்கள். அவனைப் புகழும் முறையை அறிந்தவர்கள். நானோ புதிய அடிமை. உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?

எழுப்புபவள்: உன்னுடைய அன்புடைமை உண்மையானது என்று எங்களுக்குத் தெரியாதா? அதை அனைவரும் அறிவோம். மனம் செம்மையுடையவர்கள் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்

1 comment:

  1. இன்றைய சுற்றுப்புற சூழ் நிலையில் யாராவது பொய்கையில் என்ன காவிரியில் என்ன கங்கையில் கூட நீராட முடியவில்லையே?
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete