Saturday, December 25, 2010

திருப்பாவை - 11, திருவெம்பாவை - 1

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 11

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக்கு றங்கும் பொருளேலோ ரெம்பாவாய்


பொருள்:
கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், புனிதமான அந்த கறவைகளைப் போற்றாமல் அவைகளுக்குக் கொடுமை செய்யும் பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர்புரிபவர்களும் ஆன, ஒரு குறையுமில்லாத கோவலர்கள் (கோ-காவலர்கள் - இடையர்கள்) குலத்தில் தோன்றிய பொற்கொடியே! புற்றில் இருந்து வெளிவரும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்து மயிலை ஒத்த சாயலையும் உடையவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களைப் போற்றி பாடியபடி உள்ளோம்! செல்வம் நிறைந்த பெண்ணே, நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவதன் அர்த்தத்தை நாங்கள் அறியோம்!

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 1

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
     சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
     மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
     போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
     ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்!

மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம்.


பொருள்:
 
திருவண்ணாமலையார் ஆதியும் அந்தமும் இல்லாதவர்! பிரமனும், நெடுமாலும் அடியும், முடியும் காண முடியா அனற் பிழம்பாய், அருட்பெருஞ்சோதியாய் நின்றவர், அந்த தியாகராஜருடைய திருவடி பெருமைகளை நாங்கள் அனைவரும் பாடுகின்றோம்.

ஆனால் வீதியிலே எம்பெருமானின் திருநாமங்களை கேட்டவுடனே விம்மி விம்மி மெய் மறந்து இறைவனில் ஒன்றிவிடுகின்ற, வாள் போன்ற கூரிய கண்களைக் கொண்ட பெண்ணே! இப்போது அந்த வாழ்த்தொலிகளை கேட்ட பின்னும், செவிட்டு மங்கையைப் போல் உறங்குகின்றாயோ, உனது செவிகளுக்கு என்ன ஆயிற்று?

எம்பெருமானை மறந்து விட்டு இந்த பஞ்சு மெத்தை சுகத்திற்கு ஆளாகி தூங்குகின்றாயா? இதுதான் தூக்கத்தின் பரிசா பாவையே? அதை விடுத்து எழுந்து வா இறைவனின் புகழ் பாடி மார்கழி நீராடுவோம், அவரது திருவருளைப் பெறுவோம்.

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

7 comments:

  1. கோவலன் என்பதற்கு இதுதான் பொருளா? ஆனால் கண்ணகி கோவலன் வைசியாள் இனத்தை சேர்ந்தவன் அல்லவா? இடையர் குலம் அல்லவே?
    பேரை வைத்து இனத்தைப் பார்ப்பது சரி இல்லைதான்
    அன்புள்ள
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete
  2. @Dr. Kailasam sir:

    ஐயா,

    நண்பர் ஒருவரின் விளக்கத்திலிருந்து சில பகுதிகள்:

    "செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!

    ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!

    போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத் தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! இதுக்கு-ன்னு கோனார்களையும் கூடவே போர்க்களத்துக்குக் அழைத்துப் போவார்கள்! போரெல்லாம் அப்புறம் தான் துவங்கும்! இப்படி முல்லைநில மாயோன் நெறியை மிகவும் மதித்து வாழ்ந்த சமுதாயம் பண்டைத் தமிழ்ச் சமுதாயம்!

    பசுக்களைக் காக்கும் முல்லை மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலன் என்ற பெயரும் இங்கிருந்தே தோன்றியது தான்! கோவலன் = கோவிந்தன் = கண்ணன்!
    ஆயன், கோனான், கோவலன் என்றே குலப் பெயர்களும் உண்டு! இன்றும் திருக்கோவிலூர் நாச்சியாருக்கு பூங்+"கோவல்" நாச்சியார் என்றே திருப்பெயர்!

    சிலப்பதிகாரக் கோவலன் ஆயர் குலம் இல்லை என்றாலும், கோவலன் என்னும் பேர் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்க வேண்டும்! அதை ஒரு வணிகர் தலைவரான மாசாத்துவான் மகனுக்குச் சூட்டி இருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!"

    நன்றி
    வர்தினி.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் வர்த்தினி. மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள்
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete
  4. Thank you Sir. I convey this to the friend who has actually given this explanation in his post.
    Rgds
    Vardhini

    ReplyDelete
  5. ஐயா,

    நண்பர் ஒருவரின் விளக்கத்திலிருந்து சில பகுதிகள்:

    "செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!

    ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!

    போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத் தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! இதுக்கு-ன்னு கோனார்களையும் கூடவே போர்க்களத்துக்குக் அழைத்துப் போவார்கள்! போரெல்லாம் அப்புறம் தான் துவங்கும்! இப்படி முல்லைநில மாயோன் நெறியை மிகவும் மதித்து வாழ்ந்த சமுதாயம் பண்டைத் தமிழ்ச் சமுதாயம்!

    பசுக்களைக் காக்கும் முல்லை மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலன் என்ற பெயரும் இங்கிருந்தே தோன்றியது தான்! கோவலன் = கோவிந்தன் = கண்ணன்!
    ஆயன், கோனான், கோவலன் என்றே குலப் பெயர்களும் உண்டு! இன்றும் திருக்கோவிலூர் நாச்சியாருக்கு பூங்+"கோவல்" நாச்சியார் என்றே திருப்பெயர்!



    ungaludaya indha bathil migavum arumai

    ReplyDelete
  6. பசு வளர்க்கும் கலாசாரம் இந்தியா முழுவதும்
    10,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்று மரபணு ஆராய்ச்சிகள் கூறுவதால்,
    தமிழ் நாட்டில் வழி வழியாக வாழ்ந்த ஆயர்களும் இருந்திருப்பார்கள்.
    உதாரணமாக சிலப்பதிகார நாயகனான
    கோவலனது பெயர் ஆயர் குலப்பெயராகும்.

    கோ என்றால் அரசன் என்றும் பொருள்.
    ஒரு கூட்டத்தின் தலைவனுக்கும் கோ என்ற பெயர் பொருந்தும்.
    ’கோவினத்தாயர் மகன்’ ஆனேறு தழுவினதைப் பற்றிக் கலித்தொகை கூறுவதால்,
    மூத்த அல்லது தலைமை தாங்கின ஆயர்கள் வம்சத்தினர்
    கோவலர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
    இவர்கள் பசுக் கூட்டங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும்.
    கண்ணகியின் கணவன் கோவலன் என்ற பெயரைக் கொண்டவனாதால்,
    அவன் மரபினர் ஆதியில், ஆயர்களாக இருந்திருக்க வேண்டும்.
    பசுக்கள் தந்த செல்வதால், பிறகு வணிகர்களாக ஆகியிருக்க வேண்டும்.

    அவர்கள் புகார் நகரத்தில் வாழ்ந்தவர்கள்.
    புகார் மகர மக்கள் தங்கள் நகரை விட்டு நீங்காத
    பழங் குடியினர் என்று சொல்லப்பட்டதால் (பகுதி 18)
    வணிகர்களான கோவலன் குடும்பத்தினர்,
    ஆதியில் ஆயர்களாக இருந்திருப்பார்கள் என்பது சாத்தியமாகிறது.

    ReplyDelete
  7. @Parthibanshanan: Thank you. Very much.. However, it is not my explanation... I have given the same from the link: http://madhavipanthal.blogspot.com/2008/12/11.html

    @Ravi Shan: மிக அரு​மையான விளக்கம். நன்றி :)

    ReplyDelete