Friday, December 24, 2010

திருப்பாவை - 10, திருப்பள்ளியெழுச்சி - 10

ஆண்டாள் அருளிய திருப்பாவை – 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
     மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
     போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
     தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
     தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்


பொருள்:
பாவை நோன்பிருந்து வைகுந்தம் அடையப் போகின்ற அம்மையே! நாங்கள் இத்தனை முறை அழைத்தும் கதவைத்தான் திறக்கவில்லை, பதிலும் கூடவா தர மாட்டாய்? நறுமணமுள்ள துளசி மாலையை தலையில் சூடிய நாராயணன், அவனை நாம் பாட, நமக்கு அவன் பேரின்பத்தை நல்குவான். முன்னொரு காலத்தில் புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் மரணத்தின் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை, உறக்கத்தில் உன்னை மிஞ்சமுடியாமல் தோற்றுப்போய் உன்னிடம் தந்துவிட்டு சென்றானோ? எல்லையில்லாச் சோம்பல் உடையவளே! எங்களுக்கு பெறுவதற்கரிய ஆபரணம் போன்றவளே! விரைவாக வந்து கதவைத் திறப்பாயாக!


மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – 10

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
    போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
    திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
    படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
    ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.


பொருள்:
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! எங்கும் நிறைந்த அமுதமே! எம்பெருமானே! நீவிர் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக் கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையை உணர்ந்த திருமாலும் நான்முகனும், தாங்களும் இந்த மண்ணுலகத்தில் போய் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோம் என்று ஏங்குகின்றனர்.

இப்படி திருமால் விரும்பும்படியும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும் உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!


திருச்சிற்றம்பலம்

நண்பர்களே,

மொத்தம் பத்துப் பாடல்களைக் கொண்ட, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் ஆண்டாள் அருளிய திருப்பாவையுடன் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களை பதிவில் காணலாம்.

நன்றி
வர்தினி

குறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

1 comment:

  1. மனிதனுக்கு தூக்கம் என்பது இல்லாமல் போய்விட்டால், உற்பத்தி இரண்டு மடங்கு பெருகுமா?

    கும்பர்கணன் தூங்காமல் இருந்திருந்தால் ராமாயணம் மாறித்தான் இருக்குமோ?
    தூக்கம் போய் விட்டால் உற்பத்தி பெருகுமா?

    அல்லது அழிவுதான் மிஞ்சுமா?
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete